உயர்நீதிமன்ற வக்கீல்கள் திடீர் ஸ்டிரைக்
சென்னை:
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் வக்கீல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் ஏட்டு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1ம் தேதி மதிவாணன் என்கிற வழக்கறிஞர் சாலை விபத்தில் காயமடைந்தார். இதையடுத்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் பணம் கொடுத்தால்தான் உள்ளே அனுமதிப்போம் என்று அங்குள்ள ஊழியர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஸ்டான்லி மருத்துவமனை காவல் நிலைய தலைமைக் காவலர் நடேசன் பேசியுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து மதிவாணனுடன் வந்த வழக்கறிஞர்கள் சங்கர், ராஜன் ஆகியோர் அதைத் தட்டிக் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், வக்கீல்கள் மீ்து மருத்துவமனை ஊழியர்களும், நடேசனும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து வக்கீல்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க பாரீஸ் கார்னர் பகுதியில் சாலை மறியலில் குதித்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீஸார் தலையிட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவிடம் வழக்கறிஞர்கள் புகார் மனுவைக் கொடுத்த சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினர்.
இந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்கள், வக்கீல்கள்தான் எங்களைத் தாக்கினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கருப்புப் பட்டை அணிந்து நேற்று போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் பிரச்சினை குறித்து விளக்கிய மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன், மருத்துவமனை ஊழியர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், வக்கீல்கள் தரப்பிலிருந்தும் புகார் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து வட சென்னை இணை ஆணையர் ரவி விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்வார் எனவும் அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். வக்கீல்களைத் தாக்கிய ஏட்டு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.












Click it and Unblock the Notifications