கத்தாரில் பாலியல் சித்திரவதை - 5 இந்தியப் பெண்கள் தூதரகத்தில் தஞ்சம்
துபாய்:
கத்தாரில் வீட்டு வேலைக்காக சென்ற ஐந்து இந்தியப் பெண்கள் பாலியல் சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு புகார்களைக் கூறி இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் அங்கு பாலியல் சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இதையடுத்து சமீபத்தில் இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில் கத்தார் நாட்டில் ஒரே வாரத்தில் ஐந்து இந்தியப் பெண்கள் பாலியல் புகார்களைக் கூறி தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் தேடி வந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த ஒரு வேலைக்கார பெண், கடந்த புதன்கிழமை தனது கணவருடன் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். தன்னை வேலைக்கு வைத்தவர் சம்பளம் தராமல், பாலியல் சித்திரவதை செய்வதாக அவர் புகார் கூறியுள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்புதான் அந்தப் பெண் கத்தாருக்கு வேலைக்கு வந்துள்ளார். வந்தது முதலே அவருக்கு சம்பளம் தராமல் வேலை வாங்கி வந்துள்ளார் அவரது ஸ்பான்சர்.
தனது நிலை குறித்து அந்தப் பெண் கூறுகையில், எனது கணவர் நான் வேலை பார்த்து வரும் வீட்டிலேயே கார் டிரைவராக இருக்கிறார். அவர் சம்பளம் கேட்டபோது என் கண் முன்பாகவே எனது கணவரை அந்த ஸ்பான்சர் அடித்து உதைத்தார். மேலும், என்னையும், தனது இச்சைக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தினார் என்றார் அவர்.
இந்திய அரசு சமீபத்தில் அறிவித்த கட்டுப்பாடுகளின் படிதான் இப்பெண் கத்தாருக்கு வேலைக்கு வந்துள்ளார். அனைத்து விதிமுறைகளும் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து இந்திய தூதர் ஜார்ஜ் ஜோசப் கூறுகையில், அந்தப் பெண்ணை டிபோர்டேஷன் மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அவரது கணவரையும் அனுப்பவுள்ளோம். இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும் தகவல் கொடுத்துள்ளோம் என்றார்.
இதேபோல, கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தனது ஸ்பான்சருக்கு எதிராக மிகக் கடுமையான பாலியல் புகாரைக் கூறியுள்ளார். தன்னை உடல் ரீதியாக சித்திரவதை செய்த ஸ்பான்சர், சிகரெட் துண்டால் தன்னை சுட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தவிர ஆந்திராவைச் சேர்ந்த மேலும் 2 பெண்களும், இன்னொரு பெண்ணும் பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.
ஒரே வாரத்தில் ஐந்து இந்தியப் பெண்கள் பாலியல் சித்திரவதை புகார்களைக் கூறி தூதரகத்தை நாடியதைத் தொடர்ந்து, புதிதாக வீட்டு வேலை பார்க்க விரும்பி விண்ணப்பம் செய்துள்ள பெண்களின் விசாக்களை அனுமதிப்பதை தூதரகம் தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications