பாப்பையா மீது தங்கர் பச்சான் பாய்ச்சல்
மதுரை:
அது பெரியதா, இது பெரியதா என்று பட்டிமன்றம் நடத்தி சாலமன் பாப்பையா போன்றவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். இதனால் மக்களுக்கு என்ன பயன் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கேட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ரத்ததான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் இயக்குனர் தங்கர்பச்சான் கலந்து கொண்டு பேசுகையில், ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு படிக்கும் காலத்திலேயே பாடத்திட்டத்தில் கொண்டு வந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எல்லோரும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்க வேண்டும். கார் லைசென்ஸ் கேட்டு வருபவர்களிடம் ரத்ததானம் செய்தால்தான் லைசென்ஸ் தருவோம் என்று சொன்னால் கொடுத்து விடுவார்கள். பணக்காரர்களிடம் தான் அதிக ரத்தம் உள்ளது.
சினிமாவிலும் சரி, டிவியிலும் சரி ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமும் கிடையாது. முக்கிய தினங்களில் காலை முதல் மாலை வரை சிரிப்பு நடிகர்கள் வந்து சிரிக்க வைத்துவிட்டு போய் விடுகின்றனர்.
அதே போன்று பட்டிமன்றம் நடத்தும் சாலமன் பாப்பையா, இது பெரிதா? அது பெரிதா? என ஆராய்ச்சி செய்து மக்களின் நேரத்தை வீணடிக்கிறார். பட்டி மன்றத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை
வரும் காலங்களில் எனது படங்களில் ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை இடம் பெறச் செய்வேன் என்றார் பச்சான்.