வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு- வருகிறது நாடாளுமன்ற தேர்தல்?
டெல்லி:
அனைத்து மாநிலங்களும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை மேற்கொள்ளுமாறும், ஜனவரி 15ம் தேதிக்குள் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதனால் இடைத் தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றன. அணு சக்தி ஒப்பந்தம் கூடவே கூடாது என்று கூறி வருகின்றனர். மீறி நடந்தால் ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் மிரட்டி வருகின்றனர்.
இடதுசாரிகளின் மிரட்டல் இதுவரை வெறும் மிரட்டலாகவே இருந்து வருகிறது. இருப்பினும், அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள் என்று சோனியா காந்தி கடும் காட்டமாக பேசியுள்ளதால், இடதுசாரிகள் பெரும் ஆத்திரமடைந்துள்ளனர்.
இதனால், அணு சக்தி ஒப்பந்தத்தில் இடதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொள்ளக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால் லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியைலத் திருத்துமாறு அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும், தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக தேர்தல் காலங்களில்தான் இதுபோல நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படும். எனவே, தற்போதைய தேர்தல் ஆணையத்தின் உத்தரவால், லோக்சபா இடைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையமும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். புகைப்பட வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும். வாக்காளர்களுக்குப் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணியை முடுக்கி விட வேண்டும்.
வரும் ஜனவரி 15ம் தேதிக்குள் திருத்தப்பட்ட முழுமையான வாக்காளர் பட்டியலைத் தயாரித்து விட வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று தெற்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்களுக்கு உட்பட்ட மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்தது. அப்போது இந்த உத்தரவை கோபால்சாமி பிறப்பித்தார்.
மற்ற மாநில தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால், தேர்தல் ஜூரம் நாடு முழுவதும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.