தேனி அருகே தேவர் சிலை அகற்றம்-பதற்றம்!
தேனி:
தேனி அருகே தேவர் சிலை அகற்றப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேனி அருகே பூதிப்புரம் என்ற ஊரில் கடந்த ஆண்டு அனுமதியின்றி சிலர் தேவர் சிலையை வைத்தனர். இதையடுத்து அந்த தேவர் சிலையை அதிகாரிகள் அகற்றினர்.
இந் நிலையில் வரும் 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடக்கவுள்ளது. இந் நிலையில் பூதிப்புரத்தில் மீண்டும் அதே இடத்தில் தேவர் சிலை வைப்பது என அந்த ஊரில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினர் முடிவெடுத்தனர்.
அதன்படி அரசு அனுமதி இன்றியே கடந்த ஞாயிறுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் தேவர் சிலையை நிறுவினர். இதை அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா கொண்டு சென்றார். அதன் பேரில் அப்பகுதிக்கு வந்த மாவட்ட எஸ்பி சுதாகரன், தாசில்தார் மூர்த்தி, அப்பகுதி மக்களிடம் சமரசம் பேசினர். ஆனால் மக்கள் தேவர் சிலையை அகற்ற முன்வரவில்லை.
இதனால் அதிகாரிகளே தேவர் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அங்குள்ள சிலர் அதிகாரிகளை முற்றுக்கையிட்டதோடு வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிலர் அதிகாரிகள் மீது கற்களை வீசினர். இதையடுத்து பெண்கள் உட்பட சுமார் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட தேவர் சிலையை போடி தாலூகா அலுவலகத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். இச் சம்பவத்தால் அந்த பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.