திருட்டு பழி: போலீஸ் சித்ரவதை-தம்பதி தற்கொலை
கும்மிடிப்பூண்டி:
தாலிச் செயின் திருடியதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட கூலித் தொழிலாளியும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா (44) . இவரது மனைவி ரோஜா (38). இவர்களுக்கு பாரதி (20), சபீதா என்ற மகள்களும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த மேரி சந்திரா என்பவரின் தாலி செயின் கடந்த மாதம் திருட்டு போனது. இது குறித்து மாதம்பாக்கம் போலீசில் புகார் தந்த மேரி, ராஜா மீது சந்தேகம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து போலீசார் ராஜாவையும், ரோஜாவையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். ஆனால் ராஜாவும், ரோஜாவும் நகையை திருடவில்லை என்று மறுத்தனர்.
ஆனாலும் விடாத போலீசார் அவர்களை சித்ரவதை செய்துள்ளனர். வாரம் தவறாமல் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ஒரு தற்கொலைக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
அந்தக் கடிதத்தில் போலீஸ் அதிகாரி அவர்களுக்கு, நாங்கள் நகையை திருடவில்லை என்று கெஞ்சியும், நீங்கள் கேட்காமல் எங்கள் மீது திருட்டு பழி சுமத்தி சித்ரவதை செய்தீர்கள் இதனால் நாங்கள் அவமானம் அடைந்தோம்.
நாங்கள் எடுத்து சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. எனவே எங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறோம். எங்களின் 5 மாத ஆண் குழந்தையை தம்பி ரவியிடம் கொடுக்கவும். அவர்கள் வாங்க மறுத்தால் அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடவும். போலீசாரின் சித்ரவதை தாங்க முடியாமல் தான் நாங்கள் தற்கொலை செய்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications