மதீனா மசூதி இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும்
ஜெட்டா:
இஸ்லாமியர்களின் 2வது புனித மசூதியான, மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதி 24 மணி நேரமும் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை சவூதி மன்னர் அப்துல்லா பிறப்பித்துள்ளதாக மதீனா ஆளுநர் இளவரசர் அப்துல் அஜீஸ் இபின் மஜீத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளவரசர் அப்துல் அஜீஸ் இபின் மஜீத் கூறுகையில், யாத்ரீகர்கள் மற்றும் வழிபாட்டாளர்களின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து இந்த முடிவை மன்னர் எடுத்துள்ளார். இனிமேல் மதீனாவில் உள்ள மசூதி ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் வழிபாட்டுக்காக திறந்திருக்கும்.
மேலும் யாத்ரீகர்கள் மசூதியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருந்து பிரார்த்திக்கலாம் என்றார்.
தற்போது மதீனா மசூதி, மாலை நேர பிரார்த்தனைக்குப் பின்னர் மூடப்பட்டு விடும். மறுபடியும் அதிகாலை பிரார்த்தனையின்போதுதான் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இளவரசர் மஜீத் தொடர்ந்து கூறுகையில், மன்னரின் உத்தரவை பின்பற்றுவதற்கான ஆயத்தப் பணிகளில் மசூதியின் அனைத்துப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
மெக்கா மற்றும் மதீனா மசூதிகளை நிர்வகிக்கும் குழுவின் தலைவரான ஷேக் சலே அல் ஹூசேன் கூறுகையில், வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்கு மட்டுமே இனி மதீனா மசூதி மூடப்படும். மற்ற நேரங்களில் மசூதி திறந்தே இருக்கும் என்றார்.
உலக முஸ்லீம் இளைஞர் அமைப்பின் உதவி பொதுச் செயலாளர் முகம்மது பதாஹத் கூறுகையில், இஸ்லாமியர்களுக்கு இது சந்தோஷமான செய்தியாகும். குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரார்த்தனைக்காக வரும் இஸ்லாமியர்கள் இனி மசூதி மூடப்பட்டிருக்குமோ என்று கவலைப்படத் தேவையில்லை என்றார்.
தற்போது மெக்காவில் உள்ள பெரிய மசூதி 24 மணி நேரமும் திறந்திருக்கிறது. அந்த வரிசையில் மதீனா மசூதியும் தற்போது சேர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications