திருவாரூர் கலவரம் - கடையடைப்பு
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போலீஸார் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இரு பிரிவினருக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் விநாயகர் சதூர்த்தியையொட்டி நடந்த ஊர்வலத்தின் போது மோதல் மூண்டது.
தற்போது அமைதி திரும்பிய நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. செல்போன் ரீசார்ஜ் செய்வது தொடர்பாக இரு சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு இடையே மோதல் மூண்டது.
இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதையடுத்து நேற்று ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இரு பிரிவினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.
இதில், கடைத்தெரு மற்றும் போலீஸ் நிலையம் அருகே இருந்த 20-க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆட்டோ ஒன்றும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த மோதலில் இருதரப்பையும் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாஷ்குமார், தஞ்சை எஸ்.பி. அமீத் குமார்சிங், திருவாரூர் எஸ்.பி. அனிதா உசேன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.
சம்பவ இடத்தில் வெளிமாவட்ட போலீசார் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இன்றும் பதட்டம் நீங்காததைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கலவரத்தைக் கண்டித்து வர்த்தக சங்கங்கள் சார்பில் இன்று கடையடைப்பு நடந்தது. வர்த்தகக் கழக தலைவர் அருணாசலம் தலைமையில் வியாபாரிகள் ஊர்வலமாக சென்று மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு கொடுத்தனர்.
அதில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும். பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தனர்.
கலவர சம்பவத்தை முடிவுக்கு கொண்டு வரும் வரை கடையடைப்பு போராட்டம் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அடிக்கடி இப்படி கலவரம் ஏற்படுவதும், தாங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதையும் தடுக்கக் கோரி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கவும் தீர்மானித்துள்ளனர்.
முத்துப்பேட்டையில் இன்று பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டிருந்தன. பேருந்துப் போக்குவரத்தும் சரிவர நடக்கவில்லை.