சுய நிதிக் கல்லூரிகளில் நன்கொடை வசூலிக்க தடை-சட்ட மசோதா தாக்கல்
சென்னை:
சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பதை தடை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
1992ம் ஆண்டு தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் (நன்கொடை வசூலிப்பதற்குத் தடை) சட்டத் திருத்த மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
மசோதாவில், இஸ்லாமிய கல்வி அகாடமி மற்றும் கர்நாடக அரசுக்கு இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அனைத்து மாநில அரசுகளும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைத் தலைவராகக் கொண்டு ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
அந்தக் குழு தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழக அரசும் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது, அதைத் தடை செய்ய வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு தீர்மானித்தது. அதன்படி, நன்கொடை வசூலிக்கப்பட்டால் அந்த கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் உடனடியாக அது அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.