சேது: சட்டசபையில் தீர்மானம் சாத்தியமில்லை - காங்.
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி சட்டசபையில், தீர்மானம் கொண்டு வர முடியாது. அது நீதிமன்றத்தை மீறிய செயலாகும் என்று தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் கூறியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக முடிக்க வலியுறுத்தி மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில திமுக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் எப்படி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர முடியும். அப்படி செய்யக் கூடாது.
சேது சமுத்திரத் திட்டம் குறித்து சட்டசபையில் நாங்கள் பிரச்சினை எழுப்ப மாட்டோம். பிற கட்சிகள் இப்பிரச்சினையை எழுப்பினால் அதன் மீது விவாதம் நடந்தால் அதில் நாங்கள் பங்கேற்போம்.
சேது சமுத்திரத் திட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அது மட்டுமல்லாது, நாங்குநேரி தொழில் பூங்கா, டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை மேம்பாடு அடையச் செய்யும் அனைத்துத் திட்டங்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.
சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும். குளச்சல் துறைமுகம், முட்டம் மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றையும் முன்னேற்ற வேண்டும் என்றார் அவர்.