ஆளுநரை சந்திக்க வந்த பெண் சுருண்டு விழுந்து சாவு
பெங்களூர்:
கர்நாடக மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் நடத்திய மக்கள் தரிசனம் நிகழ்ச்சியில், ஆஸ்த்மா பாதிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். இன்னொருவர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு நிர்வாகத்தை ஆளுநரே கவனித்துக் கொள்கிறார்.
இந்த நிலையில் ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர், மக்கள் குறைகளைக் கேட்பதற்காக மக்கள் தரிசனம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மக்கள் தரிசனம் நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு ஆளுநரிடம் தங்களது குறைகளைக் கூறி நிவாரணம் கோரினர்.
இந்த நிகழ்ச்சியில், மாண்டியாவைச் சேர்ந்த லட்சுமி புட்டம்மா (40) என்ற பெண்ணும் கலந்து கொண்டார். இவர் கணவரால் கைவிடப்பட்டவர். தன்னுடன் வந்து தனது கணவர் குடும்பம் நடத்த வேண்டும், இதில் ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆளுநரிடம் மனு கொடுக்க வந்திருந்தார்.
அவருக்கு ஆஸ்துமா தொல்லை இருந்து வந்தது. இந்த நிலையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தபோது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மூச்சிறைப்பு அதிகமாக இருந்ததால் மூச்சு விட முடியாமல் திணறினார். உடனடியாக அவரை போலீஸார் அரசு பெளரிங் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அதே மாண்டியாவைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர், வரிசையில் நின்றிருந்தபோது திடீரென விஷம் அருந்தினார். எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்று சத்தமாக கூறிக் கொண்டு அவர் விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரையும் அங்கிருந்து பெளரிங் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தேறி வருவதாக டாக்டர்கள் ெதரிவித்துள்ளனர்.
இந்த இரு சம்பவத்தாலும் ஆளுநரின் மக்கள் தரிசனம் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் நிகழ்ச்சி தடைபடாமல் தொடர்ந்து நடந்தது.












Click it and Unblock the Notifications