கர்நாடகம்- 126 எம்எல்ஏக்களுடன் பாஜக, ம.ஜ.தளம் ஆளுநரிடம் அணிவகுப்பு
பெங்களூர்: தங்களது அணிக்கு 126 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும் கூறி 126 எம்எல்ஏக்களுடன் இன்று ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூரை சந்தித்தனர் கர்நாடக பாஜக-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்களான எதியூரப்பாவும், குமாரசாமியும்.
மீண்டும் கூட்டணி அமைத்து பாஜக தலைமையில் ஆட்சியைமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் கடிதம் தந்துவிட்ட நிலையில் அதன் மீது கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
20 மாதம் ஆட்சியில் இருந்த நிலையில் ஒப்பந்தத்தை மீறி பாஜகவிடம் ஆட்சியை வழங்க மறுத்தார் முதல்வராக இருந்த குமாரசாமி. காங்கிரஸ் உதவியோடு தனது மகனை ஆட்சியில் தொடர வைக்க தேவெ கெளடா முயன்றார்.
ஆனால், அதை காங்கிரஸ் விரும்பவில்லை. கெளடா-குமாரசாமியை தவிர்த்துவிட்டு தனியே வந்தால் ஆட்சி அமைக்கலாம் என அவர்களது கட்சியின் மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் தெரிவித்தது.
இதையடுத்து மதசார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரான பிரகாஷ் கெளடா-குமாரசாமிக்கு எதிராகக் கிளம்பினார். கட்சியை உடைக்கும் வேலைகளில் இறங்கினார்.
பிரகாஷை கெளடா மற்றும் குமாரசாமியால் தடுக்க முடியவில்லை. பாஜகவுக்கு ஆட்சியைத் தர மறுத்ததன் மூலம் தனது லிங்காயத் சமுதாயத்திற்கு கெளடா மோசம் செய்துவிட்டதாக கோபத்தில் உள்ள பிரகாஷ் கட்சியை உடைப்பதில் தீவிரமாக உள்ளார்.
இந் நிலையில் காங்கிரசின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் மீண்டும் பாஜகவுக்கு ஆதரவை அறிவித்தார் கெளடா. எதியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயார் என்று கூறி தனது மகன் குமாரசாமி மூலம் கவர்னரிடம் கடிதம் தந்தார்.
ஆனால், கடந்த வாரம் தான் சட்டமன்றத்தைக் கலைக்கக் கோரி கவர்னரை நேரில் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்திருந்தார் கெளடா. மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் என்ற முறையில் அந்தக் கடிதத்தைத் தந்திருந்தார்.
இதனால் பாஜகவுக்கு ஆதரவாக குமாரசாமி தந்த கடிதத்தை நிராகரித்துவிட்டு கெளடா தந்த கடிதத்தின் அடிப்படையில் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது.
அதே போல சட்டமன்றத்தைக் கலைக்கக் ேகாரி பாஜகவும் கடிதம் தந்திருந்தது. இந் நிலையில் மீண்டும் ஆட்சியமைக்க தங்களை அழைக்க வேண்டும், தேவைப்பட்டால் பாஜக, மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை ஆளுநர் முன் நிறுத்தவும், தங்களுக்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்கவும் தயார் என பாஜக அறிவித்துள்ளது.
ஆனால், ஜனதா தளத்தின் ஒரு பிரிவினர் பிரகாஷை ஆதரிப்பதால் பாஜக ஆட்சியமைக்கத் தேவையான அளவுக்கு அக் கட்சியிடம் எம்எல்ஏக்கள் இல்லை என காங்கிரஸ் கூறுகிறது.
தன்னை விட்டு எம்எல்ஏக்கள் பிரகாஷ் வசம் போய்விடுவதைத் தவிர்க்கும் வகையில் நேற்று முன் தினம் மாலையே தனது எம்எல்ஏக்கள் 40 பேரை ஒரு ரிசார்ட்டுக்குக் கொண்டு போய்விட்டார் கெளடா.
குமாரசாமியின் நேரடி மேற்பார்வையில் அவர்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் இன்று தனது எம்எல்ஏக்கள் 40 பேரையும் அழைத்துக் கொண்டு கவர்னர் மாளிகைக்கு வந்தார் குமாரசாமி. அதே போல பாஜக எம்எல்ஏக்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர்.
ஆட்சியமைக்க 113 எம்எல்ஏக்களின் பலம் போதும் என்ற நிலையில் இந்த இரு கட்சிகளிடமும் இப்போது 126 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜனதா தளத்தின் ெமாத்த எம்எல்ஏக்கள் 56 பேரில் 40 பேர் மட்டுமே கெளடா-குமாரசாமிக்கு ஆதரவாக உள்ளனர். மற்றவர்கள் பிரகாஷை ஆதரிக்கின்றனர்.
இந் நிலையில் பிரகாசை சமாதானப்படுத்துவதற்கான முயற்சிகளையும் கெளடா ஆரம்பித்தார். ஆனால், தனது நிலையில் இருந்து இறங்கி வர பிரகாஷ் மறுத்துவிட்டார். இதனால், கட்சியில் பிளவு ஏற்படுவது நிச்சமாகிவிட்டது.
இந்த விவகாரத்தில் கவர்னர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே கர்நாடக அரசியல் நிலைமை தெளிவாகும்.












Click it and Unblock the Notifications