மத்திய-மாநில அரசு ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்
சென்னை: மத்திய அரசைக் கண்டித்து நாளை நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
நாளை நடக்கவிருக்கும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2.3 லட்சத்திற்கும் அதிகமான மாநில அரசு ஊழியர்களும், 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களும் மத்திய அரசு ஊழியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் உள்ள 8 லட்சம் பணி காலியிடங்களை நிரப்பவும், அமல்படுத்தப்பட்டுள்ள 6வது சம்பள கமிஷனை கடந்த ஜனவரி 2006 முதல் செயல்படுத்தவும், ஜிபிஎஃப் நிதிக்கு ஒதுக்கப்படும் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்த கோரியும், கருணைத் தொகையை 1,000 ரூபாயாக உயர்த்தவும் கோரி இந்த அடையாள வேலை நிறுததம் நடைபெறவுள்ளது.
இது தவிர புதிய ஓய்வூதிய திட்டம், அரசு துறைகளில் ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்துவதை எதிர்ப்பது மற்றும் ஊழியர்களை நியமனம் செய்வதற்கு தடை விதிப்பது தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் தீர்வு கோரியும் இந்த வேலை நிறுத்தம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.