டிஐஜியின் உதவியாளர் வீட்டில் கொள்ளை!
திருச்சி: திருச்சியில் காவல்துறை டிஐஜியின் உதவியாளர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
திருச்சி டிஐஜி அசோக்குமார் தாசின் உதவியாளர் ரவி. இவர் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் சிலர் வீட்டின் மேல் மாடிக்கு சென்றுள்ளனர். வீட்டு கதவை, பூட்டை உடைத்துள்ளனர். அதன் பின்பு அறைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்கள் முழுவதையும் பார்த்துள்ளனர்.
ஆனால் கொள்ளையர்கள் எதிர்பார்த்தது போல் அங்கு பணம், நகைகள் எதுவும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு கோபத்தில் அங்குள்ள பொருட்களை தாறுமாறாக வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
காலையில் தூங்கி எழுந்த பின்னர் வீட்டின் மேல்மாடிக்கு சென்ற ரவி அறையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் மாடி அறைகளை சோதனை செய்ததோடு கைரேகை நிபுணர்களை வரவழைத்து பதிவு செய்தனர்.
திருச்சி டிஐஜியின் உதவியாளர் வீட்டிற்குள் புகுந்து கொள்ளை நடந்த சம்பவம் திருச்சி மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.