டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ஆக பெயர் மாறும் வி.எஸ்.என்.எல்.
டெல்லி: வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பெயர் விரைவில் டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என மாற்றப்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை வி.எஸ்.என்.எல். இயக்குநர் குழு வழங்கியுள்ளது.
மத்திய அரசின் வசம் இருந்த நிறுவனம் வி.எஸ்.என்.எல். இதை சில வருடங்களுக்கு முன்பு டாடா குழுமம் வாங்கியது. அதன் பிறகும் கூட தொடர்ந்து வி.எஸ்.என்.எல். என்றே இதன் பெயர் நீடித்தது.
இந்தியாவின் முதலாவது இணையதள சேவையை வழங்கிய நிறுவனம் வி.எஸ்.என்.எல். உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக 450 செல்போன் நிறுவனங்கள், 10 ஆயிரம் பிற நிறுவனங்கள், 5 லட்சம் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பெயரை மாற்ற அந்த நிறுவன இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன் படி டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிட்டெட் என்று வி.எஸ்.என்.எல்லின் பெயர் மாறவுள்ளது.
டாடா குழுமத்தின் நிறுவனம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் வி.எஸ்.என்.எல்.லின் பெயர் மாற்றப்படவுள்ளது. மேலும் உலக அளவிலான பிரபலம் அதிகரிக்கும் இது உதவும் என்று டாடா குழுமத் தகவல் தெரிவிக்கிறது.
இதுகுறித்து வி.எஸ்.என்.எல். நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநாத் கூறுகையில், தரமான, விரிவான சேவையை வழங்கி வரும் எங்களது நிறுவனத்திற்கு இந்தப் பெயர் மாற்றம் ஒரு முக்கியமான நிகழ்வாகும். உலக அளவில் சிறந்த சேவையை வழங்க இனி எளிதாக இருக்கும் என்றார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. அதன் பிறகு பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.