ஜெயலலிதாவிடம் புல்லட் புரூப் கார் ஒப்படைப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு புல்லட் புரூப் அம்பாஸிடர் கார் வழங்கப்பட்டுவிட்டது. இத் தகவலை தமிழக அரசு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா தனக்கு உண்மையான இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
தனது வீட்டில் ஊடுருவல் நடந்துள்ளதன் மூலம் தன்னைக் கொல்ல சதி நடப்பதாகவும், தனக்கு புல்லட் புரூப் கார் உள்ளிட்ட உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கவில்லை என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், இதை தமிழக அரசு மறுத்தது.
ஜெயலலிதாவுக்கு புல்லட் புரூப் காரை மத்திய அரசு தந்தபோதிலும் அது அம்பாஸிடர் கார் என்பதால் அதை ஜெயலலிதா ஏற்க மறுத்ததாக தமிழக அரசு கூறியது.
இதையடுத்து கார் வழங்கினால் ஏற்கத் தயார் என ஜெயலலிதா தரப்பு நீதிமன்றத்தில் ெதரிவித்தது. இந் நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி சுகுணா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக உள்துறைச் செயலாளர் மாலதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள ஜெயலலிதாவுக்கு 3ம் தேதியே புல்லட் புரூப் கார் தரப்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியான குப்புராஜிடம் காரும், அதற்கான டிரைவரையும் தமிழக அரசு வழங்கிவிட்டது. இதன் மூலம் தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு, இசட் பிளஸ் பாதுகாப்புக்குரிய அனைத்து வசதிகளும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
இது தவிர ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தைச் சுற்றி 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவரது இல்லத்தில் சமீபத்தில் ஒரு நபர் ஊடுருவியது குறித்த விசாரணை நடந்து கொண்டுள்ளது. போலீஸ் உதவியோடு அந்த நபர் வீட்டுக்குள் ஊடுருவியதாகவும், இதில் பெரிய சதி அடங்கியிருப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளது பொய்யான தகவல்.
போலீசார் தங்களது பணியில் அசட்டையாக இருப்பது உறுதியானால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வேறு நீதிபதி விசாரிப்பார்:
தமிழக அரசின் மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு தருவது தொடர்பான இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிப்பார் என்று அறிவித்தார்.