ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்கள் ரூ.50 லட்சம் செலுத்தி மீட்பு
திருநெல்வேலி: விபத்து வழக்குகளில் நஷ்டஈடு தரமால் இழுத்தடித்ததால் ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை ரூ.50 லட்சம் செலுத்தி தமிழக போக்குவரத்து துறை மீட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 13 அரசு போக்குவரத்து கழக டிப்போக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு பேருந்துகளால் பல்வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து துறை நஷ்ட ஈட்டு தொகையை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் பேருந்துகளை ஜப்தி செய்ய மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனால் அரசு பேருந்துகள் நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் 18 பேருந்துகளும், மற்ற தாலுகா நீதிமன்றங்களில் 5 பேருந்துகளும் ஜப்தி செய்யப்பட்டு பலமாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் பல்வேறு வழித்தடங்களில் பயணம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அரசு போக்குவரத்து துறைக்கு இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.
மேலும் நெல்லை நீதிமன்ற வளாகத்தில் அதிகளவில் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததால் பேருந்து நிலையம் போல் காட்சியளித்தது.
இதனிடையே நேற்று முன்தினம் திமுக இளைஞர் அணி மாநாட்டு பந்தலை பார்வையிட்ட அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேருவும் வந்தார்.
அப்போது தொ.மு.ச. நிர்வாகிகள் இது குறித்து போக்குவரத்து அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் நீதிமன்றங்களில் ஜப்தி செய்து நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளுக்கு நஷ்ட ஈடு தொகை முழுவதையும் செலுத்தி மீட்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சரின் இந்த உத்தரவினால் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நீதிமன்றங்களில் ஜப்தி செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த 23 பேருந்துகளுக்கு ரூ.50 லட்சம் செலுத்தி மீட்டனர்.












Click it and Unblock the Notifications