ஜெ வீட்டருகே நடமாடிய மீண்டும் ஒரு மர்ம நபர் பிடிபட்டார்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டருகே இன்னொரு மர்ம நபர் நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் தண்டபாணி என்ற நபர் ஜெயலலிதாவின் வீட்டில் நுழைந்து முதல் மாடி வரை சென்றார். அந்த விவகாரமே இன்னும் ஓயாத நிலையில் இன்னொரு நபர் பிடிபட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அருகே நேற்றிரவு 7.30 மணியளவில் ஒரு வாலிபர் சந்தேகப்படும் வகையில் நடமாடினார்.
கையில் மஞ்சள் பையுடன் திரிந்த அவரை ஜெயலலிதா வீட்டுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ஜெயலலிதாவை சந்திக்க வந்திருப்பதாகக் கூறினார்.
இதையடுத்து அவரை போலீசார் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் கண்ணன் (வயது 25) என தெரியவந்தது.
சேலம் அருகே கொண்டநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அவர் போலீசாரிடம் கூறுகையில்,
என் தந்தை பெயர் ராஜாராம், தாய் ஜெயலட்சுமி. எனக்கு 4 அக்காக்களும், 2 தங்கைகளும், 3 அண்ணன்களும் உள்ளனர். நான் 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன்.
கடந்த 2004ம் ஆண்டு என் தாய் இறந்து விட்டார். இதனால் நான் மதுரையில் என் உறவினரின் கடையில் வேலை பார்த்தேன். எனக்கு அந்த வேலை பிடிக்காததால் வீட்டுக்கு வந்தேன். ஆனால், என் அண்ணன் என்னைத் திட்டி விரட்டிவிட்டுவிட்டார்.
இதனால் மனம் உடைந்து போய் சென்னைக்கு வந்தேன். நேற்று முன்தினம் மாலை மதுரையில் இருந்து ரயிலில் சென்னை வந்தேன்.
ரஜினி அல்லது ஜெயலலிதாவை சந்திக்க எழும்பூரில் இருந்து போயஸ் கார்டனுக்கு நடந்தே வந்தேன். முதலில் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றன். என்னை அங்கிருந்த பாதுகாவலர்கள் விரட்டி விட்டனர். இதனால் ஜெயலலிதா வீட்டுக்கு சென்றேன். ஜெயலலிதாவைப் பார்த்து வேலை கேட்க திட்டமிட்டேன் என்று கண்ணீர் விட்டபடி கூறியுள்ளார் கண்ணன்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சில காலத்துக்கு முன் கண்ணன் மன நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்குப் பின் மதுரைக்கு சென்றுள்ளார்.
அவருக்கு தாயார் இறந்த பின் மன நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.