கூடுதல் கட்டணம் வசூலித்த 3 ஆம்னி பஸ் புரோக்கர்கள் கைது
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 3 ஆம்னி பேருந்து புரோக்கர்களை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் மிக மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பயணிகள் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன.
ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிவதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அப்பாவி ஜனங்களிடம் ஆம்னி பேருந்துக்காரர்கள் பல மடங்கு கூடுதலாக டிக்கெட் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை கோயம்பேடு வெளியூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களாக போலீஸாரும், ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகளும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது வெளியூர் செல்ல டிக்கெட் எடுத்துத் தருவதாகவும், கூடுதல் கட்டணம் தருமாறும் கேட்ட 3 புரோக்கர்கள் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களைப் போலீஸார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இதை பத்திரிக்கையாளர்கள் படம் பிடிக்க முயன்றபோது புரோக்கர்கள், பத்திரிக்கையாளர்களைப் பார்த்து திட்டினர், அடிக்கவும் பாய்ந்தனர். ஆனால் போலீஸார் தடுத்து அவர்களை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
சிக்கியது 3 பேர்தான், ஆனால் பெருமளவிலான புரோக்கர்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் அல்லாமல் எழும்பூர், தி.நகர், கிண்டி, தாம்பரம் அருகே பெருங்களத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் சுதந்திரமாக பண வசூலில் ஈடுபட்டிருப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications