விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடுக்காக கட்சி தொடங்குகிறார்கள்-ஸ்டாலின்
நாகர்கோவில்: பதவிகள் வேண்டும் என்பதற்காக லெட்டர்பேடு, விசிட்டிங் கார்டில் தங்கள் பெயரை போட்டுக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்வதற்காக எல்லாம் புதிதாக கட்சி துவங்குகிறார்கள் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி மாவட்ட திமுக தொண்டர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது,
தமிழகத்தில் தினமும் ஒரு கட்சியை புதிது புதிதாக தொடங்குகிறார்கள். விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடுகளில் பொறுப்புகளை போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யவே கட்சி தொடங்குகிறார்கள்.
அதுபற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் கிடைத்துள்ள பதவிகள் எல்லாம் சுகத்தை அனுபவிக்க அல்ல. மக்களுக்காக கடைமையை நிறைவேற்றவே பயன்படுத்தி வருகிறோம்.
திமுக இளைஞரணியை 1980ல் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதி துவக்கி வைத்தார். ஆனால் அதற்கு முன்னர் 1967, 68களில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற பெயரோடு ஒரு அமைப்பை நான் தொடங்கி செயல்படுத்தினேன்.
திமுகவில் எத்தனையோ அணிகள் இருந்தாலும், இளைஞரணிதான் சிறப்போடு செயல்படுகிறது என்றார்.