அமைச்சர்கள் சொத்துக் கணக்கைக் காட்ட பிரதமர் உத்தரவு
டெல்லி: மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்துக் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் அனைத்து அமைச்சர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து மத்திய அமைச்சர்களும் 2004ம் ஆண்டு முதல் தற்போதைய நிதியாண்டு வரையிலான தங்களது சொத்துக் கணக்குகளை பிரதமரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் தங்களது சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது வழக்கான நடைமுறைதான். இதேபோன்ற உத்தரவு அரசு உயர் அதிகாரிகளுக்கும் கூட உத்தரவிடப்பட்டுள்ளதாக சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பொது வாழ்க்கையில் வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்கள் தங்களது சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டிருப்பதாக அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.