அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற படகு பறிமுதல்
ராமேசுவரம்: ராமேசுவரம் கடற்பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நாட்டு படகை இந்திய கடற்படையினர் தடுத்து நிறுத்தினர்.
ராமேசுவரத்திற்கு தினந்தோறும் வெளிநாட்டு பயணிகள் உட்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடல்பகுதிகளில் ஆங்காங்கு உள்ள சிறு தீவுகளுக்கு செல்ல விரும்பும் பயணிகளை அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்று படகுகளில் அழைத்து சென்று காட்டுவது வழக்கம்.
நேற்று ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்த குழந்தைகள், பெண்கள் உட்பட வெளிநாட்டினரை நாட்டுப் படகு ஒன்றில் ஏற்றிக் கொண்டு அப்பகுதி படகோட்டிகள் சிலர் கடலில் வலம் வந்துள்ளனர்.
அப்போது பாம்பன் கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ரோந்தில் ஈடுபட்டிருந்தது. அப்பகுதியில் வலம் வந்த நாட்டு படகைப் பார்த்த கடற்படையினர், இது குறித்து மீன்வளத் துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் பாம்பன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து சென்று நாட்டு படகை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அனுமதியில்லாமல் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து படகை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications