நிதியமைச்சர் ப.சிதம்பரம் கொழும்பு சென்றார்
சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று கொழும்பு புறப்பட்டுச் சென்றார். அங்கு லட்சுமண் கதிர்காமர் நினைவு உரை நிகழ்த்தவுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று கொழும்பு புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோஹித போகலகாமா ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது இலங்கை இனப் பிரச்சினை குறித்து முக்கியமாக அவர்களுடன் ப.சிதம்பரம் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்ச்செல்வன் படுகொலைக்குப் பின்னர் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்தும் இலங்கைத் தலைவர்களுடன் சிதம்பரம் ஆலோசனை நடத்தக் கூடும் எனத் தெரிகிறது.
நேற்று சென்னையில் முதல்வர் கருணாநிதியை, ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார். எனவே முதல்வர் கருணாநிதியிடமிருந்து இலங்கை தரப்புக்கு ஏதேனும் செய்தியுடன் ப.சிதம்பரம் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும் இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களைத் தாக்குவது, கடத்துவது, சுடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்தும் இலங்கை அரசிடம் ப.சிதம்பரம் எடுத்துக் கூறி ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நினைவு உரை நிகழ்த்தவே ப.சிதம்பரம் கொழும்பு சென்றுள்ளார். இருப்பினும் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசின் முக்கியச் செய்தியுடன் அவர் இலங்கை பயணத்தை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தனது கொழும்பு பயணத்தை முடித்துக் கொண்டு சிதம்பரம் நாளை தாயகம் திரும்புகிறார்.