தமிழகத்திற்காக அயராமல் பாடுபடுகிறார் கருணாநிதி - ஸ்டாலின்
சென்னை: தமிழகம் தள்ளாடி விடக் கூடாது என்பதற்காகத்தான் தனது 84 வயதிலும் மக்களுக்காக அயராது உழைத்து வருகிறார் முதல்வர் கருணாநிதி என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நெல்லையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இளைஞர் மாநில மாநாடு தொடர்பாக சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நெல்லை மாநாட்டுக்கு ஒத்திகை மாநாடு போல் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. உங்களுக்கு கட்டளையிடவோ, உத்தரவிடவோ அல்லது ஆணையிடவோ நான் இங்கு வரவில்லை. நீங்கள் பிறப்பிக்கும் கட்டளைகளை உங்களுடன் இணைந்து நிறவேற்றவே வந்துள்ளேன். இளைஞர் அணிக்கு முதல் மாநில மாநாட்டை நடத்தும் பொறுப்பு நமக்கு கிடைத்துள்ளது.
திமுக இளைஞர் அணிக்கு நீண்ட கால வரலாறு உள்ளது. நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான்கள் அல்ல நமது இளைஞர் அணி. அதற்கு பாரம்பரிய பின்னணி உள்ளது. இன்றைக்கு புதிய புதிய கட்சிகள் வருகின்றன. வரட்டும், அது ஜனநாயக உரிமை. புதிதாக உருவாகும் தலைவர்கள் அடுத்த முதல்வர் என்று தங்களுக்கு தாங்களே பறைசாற்றும் நிலை உள்ளது.
கடந்த 1980ம் ஆண்டு இளைஞர் அணி மதுரையில் தொடங்கப்பட்டாலும் அதற்கு முன்னரே கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி, பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் ஈடுபட்டோம். அண்ணா பிறந்த நாள் விழாவில் அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் பிரம்மானந்த ரெட்டி, புதுச்சேரி முதல்வர் பரூக் மரைக்காயர் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய 3 முதலமைச்சர்களை வரவழைத்து விழா நடத்தினோம்.
இந்த விழாவிற்கு எம்.ஜி.ஆரை நானே அழைத்து வந்தேன். அவரும் குமரிக்கோட்டம் சினிமா படப்பிடிப்பிலிருந்து நேராக வந்து கலந்து கொண்டார். பெரிய மேடை போட்டு 3 நாட்கள் விழா நடத்தினோம். அதன்பின்னர் 1980ம் ஆண்டு இளைஞரணி தொடங்கப்பட்டது.
7 உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு இளைஞரணியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தோம். இன்றைக்கு எந்த அணியும் இளைஞர் அணிக்கு ஈடில்லை என்பதுபோல் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். தேசிய முன்னணி தலைவர்கள் பங்கேற்ற சென்னை கூட்டத்தின் போது திமுக இளைஞரணியின் பேரணியை ராணுவ அணிவகுப்பு போல் நடத்தியதாக வி.பி.சிங்கே பாராட்டியிருந்தார்.
இன்றைக்கு அமைச்சர்களானாலும், மேயர், எம்.எல்.ஏ மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலே உள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு பதவிகள் தேடி வந்துள்ளதே தவிர அவர்களாக நாடிச் செல்லவில்லை. பதவி, இன்று வரும் நாளை போகும். நாங்கள் இந்த இயக்கத்தின் தொண்டர்கள். தொண்டன் என்பதுதான் பெரிய பதவி. நான் உங்களில் ஒருவன்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு கலைஞர்தான் முதல்வர். தமிழகத்தை உயர்த்துவதற்காக தனது 84 வயதிலும் அவர் ஓயாது உழைத்து வருகிறார். ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து பணியாற்றி வருகிறார். தமிழகம் தள்ளாடிவிடக் கூடாது என்பதற்காக பாடுபட்டு வருகிறார்.
நெல்லையில் நடைபெறவிருக்கும் திமுக இளைஞரணி மாநாடு, தமிழகத்தில் நடைபெற்றுவரும் முதல்வர் கலைஞரின் ஆட்சிக்கு மகுடம் சூட்டுவதாக இருக்கும். தமிழக முதல்வர் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டும் மாநாடாக அமையும். வெள்ளை சீருடையுடன் இந்த மாநாட்டு அனைவரும் அணிவகுத்து வாருங்கள் என்றார் ஸ்டாலின்.