சிபிஎம் தொண்டர்கள் தடை-பைக்கில் போன மம்தா
கொல்கத்தா: போர்க்களமாக மாறியுள்ள மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமுக்கு செல்ல முயன்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கார்களைத் தடுத்துததால், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தனது கட்சித் தொண்டர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நந்திகிராம் பெரும் யுத்த பூமியாக மாறியுள்ளது. கிழக்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமத்தில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அனுமதி அளித்தது. நிலங்களையும் கையகப்படுத்தியது.
இதற்கு அங்குள்ள விவசாயிகள், திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை அங்கு நடந்த பல்வேறு மோதல்களில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவிவருவதால் மத்திய ரிசர்வ் போலீஸார் அனுப்பப்பட்டுள்ளனர்.
நந்திகிராம் விவகாரத்தில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் மம்தா பானர்ஜி. மேலும் மேற்கு வங்க மாநிலத்தை நிலை குலைய வைக்கும் வகையில் காலவரையற்ற போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக அவர் எச்சரித்தார்.
இந்த நிலையில் நேற்று நந்திகிராமுக்கு தனது தொண்டர்களுடன் செல்ல முயன்றார் மம்தா. கலவரத்தில் காயமடைந்திருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்ல அவர் கிளம்பினார்.
ஆனால் வழியெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மம்தாவை செல்ல விடாமல் அவரது காரைத் தடுத்தனர். அந்தத் தடைகளை மீறி கேலோமால் என்ற இடம் வரை வந்து விட்டார் மம்தா. ஆனால் அதற்கு மேல் அவரது காரால் செல்ல முடியவில்லை.
கோபமடைந்த மம்தா, தனது காரிலிருந்து இறங்கி, கட்சித் தொண்டர் ஒருவரின் பைக்கில் ஏறிக் கொண்டு கிளம்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பைக்கில் போன மம்தா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
ராஜினாமாவை ஏற்க மறுப்பு:
இதற்கிடையே, மம்தா பானர்ஜி அனுப்பியிருந்த ராஜினாமாக் கடிதம் முறைப்படி இல்லாததால் அதை ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்து விட்டார் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி.
முழு அடைப்பு:
இந்த நிலையில், மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அழைப்பின் பேரில் இன்று முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியுள்ளது. நாளையும் முழு அடைப்பு நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
தொடர்ந்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருவதால் மேற்கு வங்க மாநிலம் கொதிப்புடன் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications