வாசனின் தூண்டுதலே காரணம்- விஷ்ணுபிரசாத்
சென்னை: சென்னை சத்யமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜி.கே.வாசனின் தூண்டுதலே காரணம் என்று விஷ்ணுகுமார் கூறியுள்ளார்.
சென்னை, சத்யமூர்த்தி பவனில் நேற்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், எம்.எல்.ஏ வான விஷ்ணுபிரசாத் மற்றும் 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விஷ்ணுபிரசாத் கூறியதாவது,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரும், எனது தந்தையுமான கிருஷ்ணசாமி முதுகுளத்தூர் அருகே தாக்கப்பட்டது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சத்ய மூர்த்தி பவனில் நடந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.
இந்த நிலையில் நான்தான் கலவரத்தை தூண்டினேன் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜி.கே.வாசனின் தூண்டுதலே காரணம்.
வாசன் தலைவராக இருந்த போது தான் இப்படி பலர் தாக்கப்பட்டனர். நான் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது ஜி.கே.வாசன் மாநில தலைவராக இருந்தார். அப்போது சிலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அதற்காக என்னுடைய அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது.
அவர் தலைவராக இருந்த காலத்தில் தான் சத்யமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்த செல்லக்குமார், மூத்தத் தலைவர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி ஆகியோர் தாக்கப்பட்டனர்.
இப்போதும் ஜி.கே.வாசனின் தூண்டுதல் காரணமாகவே என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன் என்றார் விஷ்ணுபிரசாத்.












Click it and Unblock the Notifications