'மயூரா' ஜெயக்குமார் தாக்குதல்: கிருஷ்ணசாமி மகன் மீது வழக்கு
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்டது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏவுமான விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயூரா ஜெயக்குமார் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு விஷ்ணுபிரசாத்தான் காரணம் என மயூரா ஜெயக்குமார் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதன் பேரில் விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 132வது வட்ட காங்கிரஸ் கவுன்சிலர் வில்லியம்ஸ், மோகன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராக முன்பு விஷ்ணுபிரசாத் இருந்து வந்தார். அதன் பின்னர் ஜி.கே.வாசனின் பரிந்துரையின்பேரில் மயூரா ஜெயக்குமார் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதனால் விஷ்ணுபிரசாத் கோஷ்டியினர் பெரும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்கள் சிலரை இளைஞர் காங்கிரஸ் பொறுப்புகளிலிருந்து மயூரா ஜெயக்குமார் நீக்கினார். இதனால் சத்தியமூர்த்தி பவனில் இரு தரப்பு ஆதரவாளர்ளும் மோதிக் கொண்டனர்.
இந்தப் பின்னணியில், மயூராவால் நீக்கப்பட்ட வில்லியம்ஸ் தலைமையிலான கும்பல், நேற்று சத்தியமூர்த்தி பவனில் புகுந்து மயூரா ஜெயக்குமார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணுபிரசாத் மறுப்பு:
இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்திற்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று விஷ்ணுபிரசாத் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், என் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தப் புகார் கூறப்பட்டுள்ளது. எனக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதை காங்கிரஸார் அனைவரும் நன்கு அறிவர் என்று கூறியுள்ளார்.
தாக்குதல்: கிருஷ்ணசாமி கண்டனம்
இந் நிலையில் மயூரா ஜெயக்குமார் அரிவாளால் வெட்டப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், சத்தியமூர்த்தி பவன் வளாகத்திலேயே வெட்டப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது.
குற்றவாளிகளை உடனடியாகப் பிடித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமம் அருகே நான் வெட்டப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக நடந்துள்ள இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.