For Daily Alerts
Just In
காதி குறித்து தவறாக சொல்லவில்லை - ராகுல் காந்தி
லக்னோ: காங்கிரஸ்காரர்கள் கதர் அணிய தேவையில்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. காதிதான் காங்கிரஸின் நிரந்தர அடையாளம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் விதிகளில் நடைமுறைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும். காங்கிரஸ் தொண்டர்களை கதராடை அணிய வற்புறுத்தக் கூடாது என்று கூறியதாக தகவல்கள் வெளியானது. இதனால் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் லக்னோ வந்த ராகுல் காந்தி கதராடை குறித்து தான் தவறாக பேசவில்லை என்று விளக்கினார். அவர் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சியில் சேருபவர்களை கதர் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் தினமும் கதராடை தான் உடுத்துகிறேன்.
அப்படியிருக்கையில் கதர் அணிய தேவையில்லை என்று நான் எப்படி கூறுவேன். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நில உச்சவரம்பு சட்டம் பற்றி மட்டுமே பேசினேன்.
காலத்துக்கேற்ப காங்கிரஸ் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நான் கூறினேன். அதற்கு கதர் அணிய தேவையில்லை என்று அர்த்தம் கிடையாது.
உத்தரப்பிரதேசத்தில் கட்சி பலவீனமாக உள்ளது கவலையளிக்கிறது. இதை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ராகுல்.
Comments
Story first published: Tuesday, November 13, 2007, 13:21 [IST]