சீனா, சிலி நாடுகளில் பயங்கர நிலநடுக்கம்
சாண்டியாகோ: சிலி மற்றும் சீனா நாடுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்தனர். 117 பேர் படுகாயமடைந்தனர்.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் நேற்று பிற்பகல் 12.40 மணியளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அந்நாட்டின் டொகாபிலா நகரிலிருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையை ஒட்டி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிட்டத்திட்ட 50 வினாடிகள் தொடர்ந்து குலுங்கியபடி இருந்ததால் டொகாபிலா கலாமா, அன்டோ பகஸ்தா ஆகிய நகரங்களில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் ஓடினர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 2 மணிநேரத்திற்கு பின் மீண்டும் ஒருமுறை நிலநடுக்கம் வந்ததால் மக்கள் பெரும் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் டொகாபிலா நகரில் உள்ள ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன். இடிபாடுகளுக்குள் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உடனடியாக மீட்கும் பணி விரைந்து நடந்து வருகிறது.
இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை இருவர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆகவும், 2வதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 5.7 ஆகவும் பதிவாகியுள்ளது.
மரியாலெனா என்ற நகரில் உள்ள சுரங்கபாதை ஒன்று இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் அதில் உயிருடன் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
கடற்கரையை ஒட்டி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. ஆனால் சுனாமி எதுவும் ஏற்படாததால் பின்னர் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
சீனாவில் பயங்கர நிலநடுக்கம்:
சீனாவின் வடக்குப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி பெரும்பாலும் பாலைவனம் என்பதாலும், அங்கு மிக குறைந்த அளவே மக்கள் வாழ்வதாலும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.