ஹைதராபாத்தில் உலக பயன்பாட்டாளர் தினம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வருகிற 30ம் தேதி http://www.usabilitymatters.org/ இணையதளம் சார்பில் உலக பயன்பாட்டாளர் தினம் கொண்டாடப்படவுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த இணையதளம், ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். டிசைனர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையினர், டிசைன் பயன்பாட்டாளர்களுக்கு இடையே, டிசைன்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் பணியில் இது ஈடுபட்டு வருகிறது.
இந்த அமைப்பின் சார்பில் நவம்பர் 30ம் தேதியன்று உலக பயன்பாட்டாளர்கள் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த தினம் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது. பயன்பாட்டு பொறியியல் மற்றும் பயன்பாட்டு டிசைனிங் ஆகிய துறைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
தரமான வாழ்க்கைக்கு சிறந்த வடிவமைப்பு என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த தினம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை, தொழில்துறை, வர்த்தகத் துறை, அரசு நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்நத் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
மைக்ரோசாப்ட், கோர்டிஸ், ஓரக்கிள், விர்ட்டுசா, மோட்டோராலா, சத்யம், இன்வென்சிஸ், இன்போசிஸ், விப்ரோ, டெலோய்ட், புரோகிரஸ் சாப்ட்வேர், கன்வெர்ஜிஸ், எஸ்எஸ்ஏ குளோபர், மைண்ட்ஸ்கேப் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளன.
இதுதவிர மும்பை, கான்பூர் ஐஐடி நிறுவனங்கள், ஹைதராபாத்தில் உள்ள ஐஐஐடி, அகமதபாத் தேசிய வடிவமைப்புக் கழகம் ஆகியவை இணைந்துள்ளன.
நிகழ்ச்சியில், பன்னிபூட் இணை நிறுவனரும் இயக்குநருமான ஜான் டாட், மும்பை ஐஐடியின் பேராசிரியர் ரவி பூவய்யா, சத்யம் நிறுவன துணைத் தலைவர் அனில் ஜம்பாலா, மும்பை ஐஐடியின் பேராசிரியர் அனிருத்தா ஜோஷி, ஓவியக் கலைஞர் பரமேஸ்வர் ராஜு உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசவுள்ளனர்.
மேலும் விவரங்கள் அறிய கீழ்க்கண்ட இணைய தளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
http://www.usabilitymatters.org/