ரவுடிகளை ஒடுக்க கடும் சட்டம் வேண்டும்-ராமதாஸ்
சென்னை: கொலை, கொள்ளை, கட்டபஞ்சாயத்து மூலம் குற்றங்களை செய்வதை தொழிலாக கொண்டவர்களை தண்டிக்க மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று தமிழகத்திலும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
சமீப காலமாக கூலிப்படைகளை ஏவிவிட்டு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் படுகொலைகள் அதிகளவு நடக்கின்றன. கொலை, கொள்ளை, கட்டபஞ்சாயத்து போன்ற குற்றங்களை செய்பவர்களை தண்டிக்க உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்திலும் சட்டம் கொண்டு வரவேண்டும்.
ரவுடிகளுக்கு 3 மாதத்தில் தண்டனை வாங்கித்தரும் வகையில் சட்டம் இருக்க வேண்டும். தமிழக காவல்துறையை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும். இல்லையெனில், தமிழகம் கலவர பூமியாக மாறிவிடும். தமிழக காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் ஊழலுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அடிமையானவர்களாகவும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அதிகாரிகளை மாற்றம் செய்வது குறித்து என்னிடம் விளக்கம் கேட்டால் நான் ஆலோசனை கொடுப்பேன்.
வரும் 2011ம் ஆண்டு பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று நான் கூறியதற்கு, கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி சொல்ல எனக்கு உரிமை உள்ளது என்று கூறியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
விருத்தாசலத்தில் நடந்த ரயில்வே தொடக்க விழா அழைப்பிதழில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகாந்த் பெயர் போடுவது குறித்து அவரின் உதவியாளர் பார்த்தசாரதியிடம் கேட்டதற்கு, விஜயகாந்த் படப்பிடிப்பில் இருப்பதால் அவ்ர் விழாவில் கலந்து கொள்ள முடியாது, அதனால் அவரின் பெயரை அழைப்பிதழில் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதனால் தான் அழைப்பிதழில் விஜயகாந்த் பெயர் போடவில்லை என்றார் ராமதாஸ்.
தனது பெயரை அழைப்பிதழில் போடவில்லை, தன்னை அந்த விழாவுக்கு அழைக்கவில்லை என விஜய்காந்த் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications