போலீஸ் அடித்து பாமக பிரமுகர் பலி?: ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவு
கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே பாமக பிரமுகர் காவல் நிலையம் எதிரில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததார். அவரை போலீசாரே அடித்துக் கொன்றதாக கூறி பொதுமக்கள் பேருந்துகளின் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இந்த மர்மச் சாவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (40). பாமக பிரமுகரான இவர் என்.எல்.சியில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார்.
நெய்வேலியில் இருந்து கடலூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிய ராமலிங்கத்துக்கும், பேருந்து கண்டக்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமலிங்கத்தை குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார் கண்டக்டர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை காவல் நிலையம் முன் ராமலிங்கம் பிணமாகக் கிடந்தார்.
இதையடுத்து ராமலிங்கத்தின் உறவினர்கள் மற்றும் பாமக தொண்டர்கள் விரைந்து வந்து போலீசார் அடித்ததால் தான் ராமலிங்கம் இறந்து விட்டதாக சொல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது குறித்து அறிந்த நெய்வேலி எஸ்பி இளங்கோ தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் விரைந்து வந்தனர்.
அப்போது காவல்துறை உயரதிகாரிகளுக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
இந்நிலையில் போலீசார் ராமலிங்கத்தின் உடலை காரில் ஏற்றி கடலூர் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் ராமலிங்கத்தின் மனைவி மற்றும் கெளரி அவரது உறவினர்கள், பாமகவினர் சடலத்தை அகற்ற விடவில்லை.
போலீசார் தான் என் புருஷனை அடித்து கொன்று வீதியில் தூக்கி போட்டுவிட்டார்கள். இதற்கு எனக்கு நீதி கிடைக்கும்வரை உடலை அப்புறப்படுத்த விடமாட்டேன் என்று கூறியபடி கணவரின் உடலை கட்டிப்பிடித்துக் கொண்டார் கெளரி.
நேரம் செல்ல செல்ல போலீசாருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். இதற்கிடையே ஒரு கும்பல் அப்பகுதியாக சென்ற 3 பேருந்துகளை அடித்து நொறுக்கியது.
இதனால் கடலூர்-விருத்தாசலம் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலும் செய்தனர்.
அதுவரை அமைதியாக இருந்த போலீசார் திடீரென சாலை மறியல் செய்தவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
ராமலிங்கத்தின் உடலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தடியடியில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ஆனால், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரும் ராமலிங்கத்தின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர்.
போலீசாரே அடித்துக் கொன்றுவிட்டு, பிரேத பரிசோதனையை மோசடியாக நடத்தியுள்ளனர்.
ராமலிங்கத்தை கொன்றவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நியாயம் கேட்க சென்ற கிராம மக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் கடலூரில் பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இச் சம்பவம் குறித்து தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த ராமலிங்கத்தின் மரணம் குறித்தும், அது தொடர்பாக ஏற்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை சம்பந்தமாக காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை சட்ட வரம்பிற்கு உட்பட்டதா என்பதையும் விசாரணை செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் நடத்துவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications