கருணாநிதியின் கட்டுப்பாட்டில் திமுக இல்லை-இல.கணேசன்
சிதம்பரம்: தமிழ்நாட்டில் வன்முறை அதிகரித்து வருகிறது என பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சிதம்பரம் வந்த கணேசன் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி.
கர்நாடகாவில் பாஜகவுக்கு கெளடா நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். அரசியலில் தன்னை சாணக்கியனாக காட்டி கொள்ள முயன்று தோல்வியை தழுவிவிட்டார். இதன்மூலம் அவர் செல்லாகாசாகி விடுவார்.
தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கும், ரவுடிகளுக்கு வித்தியாசம் தெரியவில்லை. பெரும்பாண்மையான இடங்களில் ஆளும்கட்சியே ரவுடிதனத்தை கட்டவிழ்த்து விடுகிறது. திமுக தற்போது கலைஞர் கையில் இல்லை. இரண்டாம் தர தலைவர்களின் ஆளுமையால் மூன்றாம் தாரமாக செயல்படுகிறது.
தமிழகத்தில் திமுக பல மாவட்டங்களை சமஸ்தானங்களாக பிரித்து கொடுத்து போலீசாரை கையில் வைத்து கொண்டு ரவுடிசத்தை வளர்த்து வருகிறது.
திருவாரூரில் கம்யூனிஸ்டு அலுவலகம் தீ வைக்கப்பட்டுள்ளது. காங்கிரசாரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. இப்படி கூறிக் கொண்டே போகலாம்.
இனி தமிழகத்தில் திமுக ஆட்சியே இல்லை, வராது. நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வரும்.
மக்கள் நலனுக்காகவே மத்தியில் காங்கிரஸை ஆதரிப்பதாக கருணாநிதி கூறுகிறார். தமிழ் அகராதியை சற்று கூர்ந்து பார்த்தால் அகராதியில் மகள் மற்றும் மகன்களை 'மக்கள்' என்றே அழைப்பார். அதன் அடிப்படையில் பார்த்தால் அவர் 'மக்கள்' நலன் கருதியே ஆதரவு தெரிவித்துள்ளார். நாம் தவறாக புரிந்து கொண்டு வருகிறோம்.
எனவே 'தம் மக்கள்' நலனில் மட்டுமே அக்கறை காட்டும் திமுகவை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றார் கணேசன்.
முன்னதாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டில் வன்முறை அதிகரித்து வருகிறது. பாஜக கட்சி அலுவலகங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.
வன்முறையை கட்டவிழ்த்து விட்டால் அனைவரும் பாதிக்கப்படுவர் என்பதற்கு உதாரணம் திருவாரூர் சம்பவம் ஆகும். வன்முறையை எந்த கட்சியும் ஆதரிக்கக் கூடாது.
கரும்புக்கு விவசாயிகளின் தேவைக்கு ஏற்ற விலையை அரசு தரவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைளை கிராமத்தினரே தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும்.
கோதுமை, நெல்லுக்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
மீனவர்களின் நலனை தமிழக அரசு சரியாக கவனிக்கவில்லை. அவர்களின் நலனை காக்க பாஜக சார்பில் வரும் 30ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.