கலெக்டர் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் கிளை தடை
தேனி: தேனியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் தேனி மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை உயர் நீதிமன்றம் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தேனியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரிந்த பாலசுப்பிரமணியன், வேலுசாமி, சுப்பிரமணி, ஈஸ்வரன், நாராயணசாமி, சிகார்ஹையத்கான் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
நாங்கள் ஆறு பேரும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முறைப்படி தேர்வு செய்து இரவு காவலர்களாக நியமிக்கப்பட்டோம் பின்னர் பதவி உயர்வு பெற்று பதிவரை எழுத்தர் மற்றும் உதவியாளர்களாக பணியாற்றி வந்தோம்.
எங்கள் பதவி உயர்வு முறையாக அளிக்கப்படவில்லை என கூறி தேனி மாவட்ட கலெக்டர் எங்களுடைய பதவி உயர்வை கடந்த செப்டம்பர் 26ம் தேதியன்று ரத்து செய்ததுடன் சம்பள உயர்வையும் ரத்து செய்யச் சொல்லி உத்தரவு போட்டுள்ளார். இதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தனது உத்தரவில், தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இந்த வழக்கு குறித்து ஊரக வளர்ச்சி துறை செயலாளர், தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோரிடமிருந்து 4 வாரத்தில் பதில் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.