கூலிப் படைகளை வேரறுக்க காவல்துறைக்கு கருணாநிதி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் நடமாடி வரும் ரவுடிகள் மற்றும் கூலிப் படையினரை அடியோடு வேரறுத்து அவர்களது அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழத்தில் அதிகரித்து வரும் கொலைகள், அரசியல் கொலைகள், கூலிப் படைத் தாக்குதல்கள், பழிக்குப் பழி தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீதான கொலை வெறித் தாக்குதல், திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டது, செங்கல்பட்டு நகர அதிமுக செயலாளர் கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு படுகொலைச் சம்பவங்களில் கூலிப் படையினர் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது.
கூட்டணிக் கட்சிகளான பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட சட்டம் ஒழுங்கு விமர்சித்து வருவதால், நேற்று உயர் காவல் அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி அவசர ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்ட அரங்கில் நடந்த இக்கூட்டத்தில், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி, துரைமுருகன், பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், ஏ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் தரப்பில் தலைமைச் செயலாளர் திரிபாதி, உள்துறைச் செயலாளர் மாலதி, நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலாளர் ஜோதி ஜெகராஜன், டிஜிபி ராஜேந்திரன், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயகுமார், சென்னை காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன், உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்,
சிறைத் துறை கூடுதல் டிஜிபி சேகர், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி சுப்பிரமணியன் மற்றும் நான்கு மண்டல ஐஜிக்கள், மதுரை-கோவை காவல்துறை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்திய முதல்வர் காவல்துறைக்கு பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடந்த இக்கூட்டத்தில்,
சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை தீவிரப்படுத்த வேண்டும்.
ரவுடிகள் தொடர்பான பாதுகாப்பு விஷயங்களில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளுக்கும் அடிபணிய கூடாது. தயவு தாட்சண்யமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூலிப் படையினர் மற்றும் ரவுடிக் கும்பல்களை அடையாளம் கண்டு, அவர்களின் செயல்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் காவல்துறையினர் தலையிடக் கூடாது.
சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் மரணம் எந்தச் சூழ்நிலையிலும் நிகழாவண்ணம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
மாநகரங்களின் புறநகர் பகுதிகளில் கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் ஏற்படாத வகையில் போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க, போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் கடைபிடிக்குமாறு போலீசாரும், போக்குவரத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சிறைகளில் கைதிகள் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். கைதிகள் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடத் துணை போகும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த அதிரடி உத்தரவினால் தமிழகம் முழுவதும் ரவுடிகள், சமூக விரோதிகள் மீதான காவல்துறையினரின் பிடி இறுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், டெல்லி திகார் சிறையில் பணியாற்றிய தமிழக காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட ரூ. 22 கோடிக்கான காசோலையை டிஜிபி ராஜேந்திரனிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.












Click it and Unblock the Notifications