கோவா ஆளுநர் மீது நாகா தீவிரவாதிகள் தாக்குதல்
திம்மாபூர்: கோவா மாநில ஆளுநரும், நாகலாந்து மாநில முன்னாள் முதல்வருமான எஸ்.சி. ஜமீர் மீது இன்று நாகா தீவிரவாதிகள் இன்று பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நாகாலாந்து மாநில முன்னாள் முதல்வரான எஸ்.சி. ஜமீர் தற்போது கோவா மாநில ஆளுநராக உள்ளார்.
இன்று அவர் அஸ்ஸாம் மாநிலம் திம்மாபூரிலிருந்து மோகோசுங் என்ற இடத்திற்குக் காரில் சென்றார். அப்போது அஸ்ஸாம் - நாகாலாந்து எல்லையில், நாகா தீவிரவாதிகள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர்.
சுபேத்லா கேட் என்ற இடத்தில் நடந்த இந்த திடீர் தாக்குதலில் ஜமீர் பயணித்த கார் மீது தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக தீவிரவாதிகள் சுட்டனர். கையெறி குண்டுகளையும் வீசித் தாக்கினர்.
இந்தத் திடீர் தாக்குதலால் பாதுகாப்புப் படையினர் நிலை குலைந்தனர்.
தீவிரவாதிகளின் தாக்குதல் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினரும் கடுமையாக சண்டையிட்டனர். தீவிரவாதிகளை விரட்டியடித்த பின்னர் ஜமீரின் கார் பாதுகாப்பாக அங்கிருந்து சென்றது. அவருடன் வந்த 20க்கும் மேற்பட்ட கார்களும் பத்திரமாக கிளம்பிச் சென்றன.
ஜமீர் மற்றும் அவருடன் வந்த அனைவரும் பத்திரமாக தப்பியதாகவும், யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல தீவிரவாதிகள் தரப்பிலும் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஜமீருடன் வந்த 3 கார்களுக்கு மட்டும் லேசான பாதிப்பு ஏற்பட்டது.
ஜமீரைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கடந்த 10 ஆண்டுகளில் இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications