உ.பி தொடர் குண்டுவெடிப்பில் 15 பேர் பலி, 59 பேர் படுகாயம்
வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த 6 குண்டுவெடிப்புகளில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 59 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் லக்னெள, பைசாபாத் நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களிலும், வாரணாசி கலெக்டர் அலுவலக வளாகத்திலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்பில் 15 பேர் வரை பலியாகியுள்ளனர். 59 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடங்களில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் வாரணாசியும் 4 பேர் பைசாபாத்திலும், லக்னெளவில் 2 பேரும் பலியாகியுள்ளனர்.
3 இடங்களிலும் 6 வெடிகுண்டுகள் சைக்கிள்களில் வைத்து வெடிக்க செய்யப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டுகள் ஆர்.டி.எக்ஸ் வகையைச் சேர்ந்தவை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்துக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்தகவலை அந்த அமைப்பு ஈ-மெயில் மூலம் தெரிவித்துள்ளது.
பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் நிதியுதவி வழங்கப்படும் என உபி முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.
பிரதமர் கண்டனம்:
உத்தரப்பிரேதச தொடர் குண்டு வெடிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உகாண்டாவில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற அவர் அங்கிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
உ.பி.யில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக, விஎச்பி பந்த் அறிவிப்பு:
இந்த தொடர் குண்டு வெடிப்பை கண்டித்து இன்று உத்தரப்பிரதேசம் முழுவதும் பந்த் நடத்தப்பபட்டு வருகிறது.
இது தவிர சமாஜ்வாடி கட்சி சார்பில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
மாநிலத்தில் மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications