தமிழகத்தில் கூலிப் படைகள், ரெளடிகளை ஒழிக்க கடும் சட்டம்
சென்னை: தமிழகத்தில் கூலிப் படைகளை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
காசுக்கு ஆளை வெட்டும், கடத்தும், தாக்கும், கொல்லும் கும்பல்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு பணம் தரப்படுவதோடு, இவர்களது நீதிமன்ற செலவுகளையும் இவர்களை பயன்படுத்தும் கும்பல்களே ஏற்கின்றன. மேலும் இவர்கள் சிறையில் இருக்கும் காலத்தில் அல்லது போலீசாரால் தேடப்படும்போது தலைமறைவாக இருக்கும்போது குடும்பச் செலவையும் இந்தக் கும்பல்களே ஏற்கின்றன.
இதனால் ரெளடித்தனத்தில் ஈடுபடுவோருக்கு இது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. தங்கள் குடும்பத்தினரின் ஆதரவுடன் இவர்கள் கூலிப் படைகளாக செயல்படுவது வழக்கமாகிவிட்டது.
இந் நிலையில் சமீபத்தில் நடந்த அரசியல் கொலைகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. அடுத்தடுத்து நடந்த கொலைகளில் பயன்படுத்தப்பட்டது கூலிப் படைகளே என்பதால் அவர்களை ஏவிவிட்ட சூத்ரதாரிகள் இந்த வழக்குகளில் அவ்வளவு சீக்கிரத்தில் சிக்கிப் போவதில்லை.
இதனால் கூலிக்கு கிரிமினல்தனம் செய்பவர்களை ஒடுக்கினால் தான் கொலைகளை தடுக்க முடியும் என இரு தினங்களுக்கு முன் முதல்வர் தலைமையில் நடந்த உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூலிப்படையினர் மற்றும் ரெளடிக் கும்பல்களை அரசியல் நெருக்கடிகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒழித்துக் கட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில்,
முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட எஸ்பிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ரெளடிகளை கணக்கெடுத்து அவர்களை கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கூலிப் படைகளையும், ரெளடிகளையும் ஒழிக்க மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் சிறப்பு சட்டம் அமலில் உள்ளது. தமிழகத்திலும் அதே போன்ற சட்டத்தை கொண்டு வரலாம் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளோம்.
இந்த சட்டத்தின் கீழ் ரெளடிகளை ஒழிக்க போலீசாருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும். கமிஷனர்களும், எஸ்பிக்களும் இந்த சட்டத்தை நேரடியாக கையாளுவார்கள். தற்போது குற்றவாளிகளை 15 நாள் மட்டுமே நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுகிறார்கள். இந்த புதிய சட்டப்படி குறைந்தபட்சம் 30 நாட்கள் குற்றவாளிகளை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடலாம்.
இதனால் குற்றவாளிகள் உடனே ஜாமீனில் வருவது தடுக்கப்படுகிறது. தற்போது போலீசாரிடம் குற்றவாளிகள் கொடுக்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் உரிய ஆதாரமாக ஏற்கப்படுவதில்லை. குற்றவாளி போலீசாரிடம் கொடுக்கும் வாக்குமூலத்தை இல்லை என்று மறுக்கலாம்.
இந்த புதிய சட்டம் குற்றவாளி போலீசாரிடம் கொடுக்கும் வாக்குமூலம் உரிய ஆதாரமாக ஏற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்கிறது. ஆனால் வாக்குமூலத்தை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அம்சமும் உண்டு.
மேலும் தண்டனை பெற்ற ரெளடிகள் மற்றும் கூலிப்படையினர் சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இந்த சட்டம் அதிகாரத்தை கொடுக்கிறது. இதனால் பணத்துக்காக கொலைகளை செய்யும் கூலிப் படைகளின் சொத்து கைப்பற்றப்பட்டுவிடும். இந்த பயமே கூலிக் கும்பலை தடுத்துவிடும் என்றார் ராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications