காமன்வெல்த் மாநாடு: 32 நாடுகளின் தலைவர்கள் வரவில்லை!

இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த நாடுகளின் கூட்டமைப்புதான் காமன்வெல்த் அமைப்பு. இந்த அமைப்பின் கூட்டம் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நேற்று நடந்தது. பாகிஸ்தானை காமன்வெல்த்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்து காமன்வெல்த் அமைப்பு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
ஆனால் அதை விட பெரும் சலசலப்பை ஏற்படுத்திய முக்கிய விஷயம், நேற்று நடந்த கூட்டத்தில் வெறும் 21 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டதுதான்.
பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் காமன்வெல்த் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த நாடுகள் பெரும்பாலானவற்றின் சார்பில் மூத்த அமைச்சர்கள்தான் கலந்து கொண்டனர்.
நேற்றைய மாநாட்டின் தொடக்கமாக இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் தொடக்க உரையாற்றினார்.
தெற்காசியாவிலிருந்து நமது பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்தியக் குழுதான் மாநாட்டிலேயே பெரிய அளவில் வந்திருந்த குழு ஆகும்.
மாலத்தீவு அதிபர் மாமூன் அப்துல் கயூம் தேர்தல் காரணமாக வரவில்லை. ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டும் வரவில்லை. அங்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடப்பதாலும், அவரது தலைவிதி மாற்றி எழுதப்படவுள்ளதாக பலமான பேச்சு நிலவுவதாலும் அவர் வரவில்லை.
இதுவரை நடந்த காமன்வெல்த் மாநாடுகளிலேயே மிகவும் சிறிய அளவிலான கூட்டம் இதுதான் என்று கூறப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொண்ட ஒரே பெண் தலைவர் நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க் மட்டுமே.
காமன்வெல்த் அமைப்பு தற்காலத்திற்குப் பொருத்தமான அமைப்பு இல்லை என்று பேச்சு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் பெரும்பாலான தலைவர்கள் மாநாட்டுக்கு வராதது, அந்தக் கருத்தை மீண்டும் வலுவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications