மயூரா தாக்குதலில் விஷ்ணுபிரசாத்துக்கு தொடர்பில்லை - காங். குழு

கடந்த 11ம் தேதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலர் சைதை வில்லியம்ஸ் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விஷ்ணுபிரசாத்தான் தாக்குதலுக்குக் காரணம் என மயூரா ஜெயக்குமார் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
இதனால் போலீசார் அவரை முதல் குற்றவாளியாக சேர்த்தனர்.
இந்த நிலையில் விஷ்ணுபிரசாத், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வார கால முன்ஜாமீன் பெற்றார்.
இதற்கிடையே, மயூரா மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி அனந்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் மூத்த தலைவர் வடிவேலு, எம்.எல்.ஏ யசோதா ஆகியோரும் இடம் பெற்றனர்.
இந்தக் குழு அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து விசாரித்தது. பின்னர் இந்த விசாரணை தொடர்பான 30 பக்க அறிக்கையையும், வீடியோ ஆதாரங்களையும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அருண் குமாரிடம் விசாரணைக்குழு ஒப்படைத்தது.
விசாரணை அறிக்கையில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான மயூரா ஜெயக்குமார் ஆகியோர் விஷ்ணுபிரசாத் மீது சொன்ன புகார்கள் அனைத்தும் தவறானவை. புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
மயூரா ஜெயக்குமாரை தாக்கிய சைதை வில்லியம்ஸ் விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ.வுக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால் இந்த தாக்குதலில் விஷ்ணுபிரசாத்துக்கு தொடர்பு இருக்கிறது என்று ஜெயக்குமாருக்கு சந்தேகம் வந்துள்ளது. ஆனால் இது உண்மை கிடையாது.
அதேபோல், தன்னை கொல்லை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அடியாட்களை அனுப்பினார் என்று விஷ்ணுபிரசாத் கூறிய புகாரும் பொய்யானதே என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஷ்ணுபிரசாத் கூறுகையில், நான் நிரபராதி, எனக்கும், இந்தத் தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை என்று தொடக்கத்திலிருந்தே கூறி வந்தேன். இப்போது அது உண்மையாகியுள்ளது.
இந்தத் தாக்குதல், அதில் எனது பெயர் அடிபட்டது ஆகியவை தேவையற்றது. மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் வன்முறையை ஆதரிப்பதில்லை. வன்முறையாளர்களுக்கும் இங்கு இடமில்லை. அரசியல் பழிவாங்கும் போக்கின் காரணமாகவே எனது பெயர் இந்த தாக்குதல் சம்பவத்தில் இழுக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.
விஷ்ணுபிரசாத் நிரபராதி என்று விசாரணைக் குழு கூறியிருந்தாலும், நான்கு பேர் மீது தவறு இருப்பதாக தெரிவித்துள்ளது. அவர்கள் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications