சஞ்சய் தத்துக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

1993ம் ஆண்டு மும்பையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் சஞ்சய் தத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பின் நகல் அவருக்கு வழங்கப்படாததால் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து சில வாரங்களுக்கு சஞ்சய் தத் வெளியில் இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு தீர்ப்பு நகல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், முழுமையான ஜாமீன் கோரி சஞ்சய் தத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், சஞ்சய் தத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அவரது நண்பர் யூசுப் நல்வாலாவுக்கும் ஜாமீன் கிடைத்தது. அதேசமயம், மேமன் சகோதரர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சஞ்சய் தத் மற்றும் நல்வாலாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சஞ்சய் தத் தனது பாஸ்போர்ட்டை மும்பை தடா கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications