பெண் புலி தற்கொலைத் தாக்குதல்: டக்ளஸ் தேவானந்தாவைக் கொல்ல முயற்சி

இலங்கை அமைச்சரவையில், சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.
இக்கட்சியின் அலுவலகம் கொழும்பு, நாரஹென்பிட்டி என்ற இடத்தில் உள்ளது. இன்று காலை டக்ளஸ் அங்கு வருவதற்கு முன்பு காலை 8.05 மணியளவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இலங்கை காவல்துறை அதிகாரி ஜயந்த என்பவர் கூறுகையில், பெண் ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்தினார். தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாரஹென்பிட்டியிலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் பொதுமக்களை டக்ளஸ் சந்தித்து வருவது வழக்கம். இன்று காலையும் அவரை சந்திப்பதற்காக பொதுமக்கள் அங்கு வருகை தந்திருந்தனர்.
பொதுமக்களைப் போன்றே தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் வரிசையில் நின்றுள்ளார். அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவரை போன்று இருந்தார்.
அதனால் அவரை சோதனை செய்யாமலேயே காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதித்தனர். ஆனால் அப்பெண்ணை, டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் தொடர்பாளர் ஸ்ரீபன் பீரிஸ் சோதனை செய்ய முயன்றார்.
அப்போது அந்த பெண் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தார். இதில் சிக்கி ஸ்ரீபன் உள்ளிட்ட இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
3 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஸ்ரீபன் உயிரிழந்தார். அவருக்கு வயது 61.
ஈ.பி.டி.பியைச் சேர்ந்த சுஜந்தம் மற்றும் டக்ளஸின் மெய்ப் பாதுகாப்பாளர் ஆனந்த புலியங்குளம் ஆகியோர் காயமடைந்தவ மற்ற இருவர்.
தாக்குதல் நடத்தியது விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2004 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 7ஆம் நாள் கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த டக்ளஸின் அமைச்சக அலுவலகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்து அதில் டக்ளஸ் தப்பினார் என்பது நினைவிருக்கலாம்.
ராணுவத் தாக்குதலில் 7 மாணவிகள் பலி:
இதற்கிடையே, வன்னி பகுதியில், கொக்குவில் - துன்னக்காய் சாலையில் உள்ள அய்யங்கேணி என்ற இடத்தில் ராணுவத்தின் ஆழ் ஊடுறவும் படைப் பிரிவினர் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 7 மாணவிகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் வேன் ஒன்றில் முதலுதவி சிகிச்சை சேவைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த தாக்குதல் நடந்தது.
மாவீரர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி ராணுவத்தின், ஆழ் ஊடுறுவும் படைப் பிரிவினர் கடந்த 3 நாட்களாக தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications