யுனானி மருத்துவக் கல்லூரி பிரச்சனை- அரசு தலையிட விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: சென்னை யுனானி மருத்துவக் கல்லூரி பிரச்சனையை தமிழக அரசு தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை யுனானி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் அந்த கல்லூரி பொறுப்பாளரை மாற்றக் கோரி கடந்த 14ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த பொறுப்பாளர் ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டிலிருந்து இதே கல்லூரியில் துணை முதல்வராக இருந்தபோது புகார்களுக்கு ஆளாகி மாற்றப்பட்டவர் என தெரிகிறது.
மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய முதல்வர், நிர்வாகத் திறமையின்மை மற்றும் அராஜக போக்குடன் கல்லூரியை சீர்குலைப்பதாக மாணவர்கள் குமுறுகின்றனர்.
சிறுபான்மை சமுதாயத்திற்காக பாடுபடுவதாக கூறும் அரசு அவர்களுக்கென உள்ள ஒரே கல்லூரியை சீர்குலைக்க முயல்வதா என்பதே என் கேள்வி. கல்லூரி முதல்வர்கள் நிர்வாகத் திறமையும் இருக்க வேண்டுமென்று தமிழக கல்வி அமைச்சர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்திற்கு தகுந்தவரல்ல என்று மாற்றப்பட்ட ஒருவரை மீண்டும் வேண்டுமென்றே அதே இடத்தில் நியமித்தது மட்டுமல்லாமல் பதவி உயர்வும் தந்திருப்பது, குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழி பறிக்கும் கதையாக உள்ளது.
எனவே இந்தப் பிரச்சனையில் உடனே தமிழக அரசு தலையிட்டு யுனானி கல்லூரியை காப்பாற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.