கர்நாடக சட்டசபை கலைக்கப்பட்டது - விரைவில் தேர்தல்
டெல்லி: கடந்த சில மாதங்களாக அரசியல் குழப்பங்களை சந்தித்து வந்த கர்நாடக மாநிலத்தில், நேற்று இரவு சட்டசபை கலைக்கப்பட்டது. இதன் மூலம் விரைவில் கர்நாடக சட்டசபைக்கு இடைத் தேர்தல் நடத்த வழி ஏற்பட்டுள்ளது.
குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால் குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. இதையடுத்து அவர் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
அதன் பின்னர் நடந்த பல்வேறு அரசியல் பேரங்கள், குழப்பங்களைத் தொடர்ந்து பாஜக அரசமைக்க ஆதரவு தருவதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் அறிவித்தது. இரு கட்சி எம்.எல்.ஏக்களும் டெல்லி வரை சென்று குடியரசுத் தலைவரையும் சந்தித்து தங்களது ஆதரவை நிரூபித்தனர்.
இதன் விளைவாக சட்டசபைக்கு மீண்டும் உயிரூட்டப்பட்டது. இதையடுத்து எதியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் ஒரே வாரத்தில் பாஜக அரசைக் கவிழ்த்து விட்டார் தேவெ கெளடா. இதையடுத்து சட்டசபை மீண்டும் முடக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.
சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் நேற்று இரவு கர்நாடக சட்டசபை கலைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கையெழுத்திட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில் இந்த அறிவிப்பை ஏற்று கையெழுத்திட்டார் குடியரசுத் தலைவர்.












Click it and Unblock the Notifications