சரக்கு ரயில் பாதை: தெற்கைப் புறக்கணிக்கும் ரயில்வே
டெல்லி: நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சரக்கு ரயில் செல்வதற்காக தனியாக ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களை இணைக்கும் சரக்கு ரயில் பாதைத் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், சரக்கு ரயில்கள் தடையில்லாமல் செல்லவும், சரக்கு ரயில்களுக்கென தனி ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே துறை திட்டமிட்டது.
அதன்படி நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களையும் இணைக்கும் வகையில் பாதை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக டெல்லி - மும்பை மற்றும் டெல்லி - கொல்கத்தா ஆகிய இரு மார்க்கங்களில் ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது. ரூ.28,000 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
1,483 கி.மீ தூரம் கொண்ட டெல்லி - மும்பை சரக்கு ரயில் பாதைக்கு 5,270 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டும். 1,279 கி.மீ தூரம் கொண்ட டெல்லி - கொல்கத்தா இடையேயான சரக்கு ரயில் பாதைக்கு 3,563 எக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகத்தின்ம் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மேற்கொள்வது குறித்து ஜப்பான் சர்வதேச கார்ப்பரேஷன் ஏஜென்சி என்ற நிறுவனம் முழுமையாக ஆய்வு நடத்தி, தனது அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் கொடுத்துள்ளது.
இதனை மேற்கொள்வதற்காக ரயில்வே அமைச்சகம் இந்திய சரக்கு ரயில் பாதை நிறுவனம் (டி.எப்.சி.ஐ.எல்) என்ற நிறுவனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு ரூ.50,000 ஆயிரம் கோடி செலவாகும் என ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாநிலங்கள் புறக்கணிப்பு:
நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு மாநகரங்களை இணைக்கும் திட்டத்தை ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றின் பெருநகரங்களை இணைக்கும் சரக்கு ரயில் பாதைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென் மாநில அரசுகளும், எம்.பிக்களும் இதுவரை எந்தக் கருத்தையும் கூறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.