ராமர் பாலம்: கருணாநிதி, பாலு மீது வழக்கு தொடர ஷத்ரிய சபா முடிவு
திருச்சி: ராமரைப் பற்றி அவதூறாக பேசிய முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு மீது அகில பாரதிய ஷாத்ரிய மஹாசபா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த சபையின் தேசிய தலைவர் அமர் சிங் பதூரியா கூறியதாவது,
ராமர் பால விவகாரத்தில் சுயநலவாதிகளான சில அரசியல்வாதிகள் ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முயன்று வருகிறார்கள். இவர்களின் இந்த செயல் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது.
எங்கள் சபையின் சார்பாக ராமர் பாலம் விவகாரம் குறித்து நாடு முழுவதும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோரி டெல்லியிலிருந்து தனுஷ்கோடிக்கு கடந்த அக்டோபர் 26ம் தேதி யாத்திரை கிளம்பியுள்ளது.
இந்த யாத்திரை டிசம்பர் 2ம் தேதி தனுஷ்கோடியை அடையும்.
ராமர் பாலத்தை சேதப்படுத்தி சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முயல்வது குறித்தும், ராமர் கடவுளை இழிவாக பேசிய முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.