சென்னையில் இன்றும் ஒரு கொலை
சென்னை: சென்னை அருகே தொழிலதிபர் ஒருவரை படுகொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டையைச் சேர்ந்த ராமநாதன்(40) திருநீர்மலையில் முருகன், ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து தோல் பதனிடும் தொழிற்சாலையை நடத்தி வந்தார்.
நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றவர் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் திருநீர்மலை ஏரி அருகே ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்.
அவரை யாரோ சிலர் அடித்துக் கொன்றுவிட்டு அவரிடமுள்ள செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து ராமநாதன் நடத்தும் தோல் பதனிடும் நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள முருகன், ரவிச்சந்திரன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட ராமநாதனுக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் மாமூல் வாங்கி வந்த ரவுடி ஒருவன் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தான். அவன்தான் மாமூல் கேட்டு ராமநாதனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்து அவனை தேடி வருகிறார்கள்.