சென்னை துறைமுக கன்டெய்னர் லாரி ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் நடத்திய ஸ்டிரைக் பேச்சு வார்த்தைக்கு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் தினந்தோறும் 2,500க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் ஏற்றி இறக்கப்படுகின்றன. ஆனால் இந்த கன்டெய்னர்களை லாரிகளில் ஏற்றவும், இறக்கவும் போதிய கிரேன்கள் துறைமுகத்தில் இல்லாததால் பல மணிநேரம் லாரிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் தங்களுக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் இழப்பு ஏற்படுவதாக கூறி கன்டெய்னர் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் திடீரென்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் ஸ்டிரைக்கால் நேற்று துறைமுகத்தில் எந்த சரக்குகளும் வெளியே செல்லவும் இல்லை. துறைமுகத்திற்கு வந்த சரக்குகள் இறக்கப்படவும் இல்லை. இதனால் நேற்று முன்தினம் சிங்கப்பூர், கொழும்பு மற்றும் ஷாங்காய் நாடுகளிலிருந்து வந்த 3 சரக்கு கப்பல்களிலிருந்து வந்த சரக்குகள் இறக்கி வைக்கப்பட்டாலும் லாரிகளில் ஏற்றப்படாமல் இருந்ததால் சுமார் 5,000 கன்டெய்னர்கள் தேங்கின.
இதனால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த சரக்குகளும் தேங்கியது. கன்டெய்னர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னை துறைமுகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் சுமார 80,000 டன் சரக்கு தேங்கியது.
இதனை சமாளிக்க துறைமுக துணைத் தலைவர் ராவ் தலைமையில் நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது கன்டெய்னர்களை லாரியில் ஏற்றி இறக்க கிரேன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று துறைமுக துணைத் தலைவரிடம் தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இவர்களின் கோரிக்கையை துறைமுக நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
இதனையடுத்து நேற்றிரவு உடனடியாக கன்டெய்னர் டிரைவர்கள், கிளீனர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டு லாரிகள் ஓடத் தொடங்கின.












Click it and Unblock the Notifications