பாமகவை நேரடியாகவே எதிர்க்கலாம்-ராமதாஸ்
சிதம்பரம்: பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் நேரடியாக எதிர்க்கலாம் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சிதம்பரத்தில் ஒரு திருமண விழாவில் பேசிய அவர்,
தமிழகத்தில் இட ஒதுக்கீடு பெற போராடியது யார் என்று கேட்டால் என்னைத்தான் சொல்வார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களால் தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்கிறார்கள். இன்னும் சில காலம் போனால் சுதந்திரம் பெற்றுத் தந்தது கூட நாங்கள் தான் என்று கூறுவார்கள்.
கிராமப்பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் முறையாக செயல்படவில்லை. டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் போதுமான அளவில் இல்லை. டாக்டர்கள் சில மையங்களில் இருந்தாலும் நாள்தோறும் அவர்கள் பணிக்கு வந்து சிகிச்சையளிப்பது கிடையாது. தட்டுப்பாடு இல்லாமல் மருந்து மாத்திரைகள் கிடைப்பதில்லை என்று கிராம மக்களே கூறுகிறார்கள்.
இந்த குறைகளை போக்குவதற்காகத்தான் மருத்துவம் படித்து முடித்ததும் குறைந்தது 4 மாதங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டுவர அன்புமணி விரும்புகிறார்.
ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடனும், பொறாமையுடனும் எதிர்க்கின்றன. நல்ல திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட பார்க்கிறார்கள். மத்திய அரசு இந்த திட்டத்தை தன்னிச்சையாக கூட உருவாக்கவில்லை. அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அரசியல்வாதிகள் யாரும் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்லக் கூடாது. அரசாங்க மருத்துவமனைகளுக்கு சென்றுதான் சிகிச்சை பெற வேண்டும். அப்போது தான் அரசு பொது மருத்துவமனைகளிலும் மற்ற மருத்துவமனைகளிலும் எத்தகைய மருத்துவ சேவை கிடைக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்பட முடியும்.
கிராமப்புறங்களில் மருத்துவர்கள் ஓராண்டு சேவை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை இந்தியா முழுவதும் அனைவரும் வரவேற்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கட்டாய கிராம சேவை என்பது இன்னும் திட்டமாக அறிவிக்கப்படவில்லை. அதற்குள் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி விட்டன.
மருத்துவ மாணவர்கள் அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் போராடுகின்றனர். அரசியல்வாதிகளும் புரியாமல் அவர்களை தூண்டி விடுகிறார்கள். இந்த திட்டத்தை எதிர்ப்பதில் இன்றைக்கு ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கும், ஏற்கனவே ஆண்டவர்களும் ஒன்றாக செயல்படுகிறார்கள்.
சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிக்குள் அரசியல்வாதிகள் எப்படி நுழைந்தனர். பாமகவை எதிர்ப்பவர்கள் நேரடியாகவே எதிர்க்கலாம். 2011ல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை யாராலும் தடுக்க முடியாது. பலரும் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் நாங்கள் கூறினால் அது கண்டிப்பாக நடந்து விடும் என்று பயப்படுகிறார்கள் என்றார் ராமதாஸ்.