ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் சமீபத்தில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது தமிழக அரசு.
ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்புவதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் கூறுகையில்,
வகுப்பறையில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படையில் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பள்ளியின் எந்த வகுப்பறைக்குள்ளேயும் சென்று சோதனை நடத்த உரிமை உண்டு.
சோதனையின் போது மாணவர்கள் செல்போன்கள் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் செல்போன்களில் ஆபாச படங்கள் ஏதும் இருந்தால் அந்த மாணவர்களுக்கு 3 மாதங்கள வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெறப்படும் என்றார்.